சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
பன்னிரெண்டாம் திருமுறை
முதற் காண்டம்
5. திருநின்ற சருக்கம்
5.1 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
1271
திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ
வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ்
பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில்
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்.
1
1272
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச்
சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள்
மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு.
2
1273
புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின்
கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர்
இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும்
வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும்.
3
1274
காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன்
பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு
சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர்
மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை.
4
1275
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன்
புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப
உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும்.
5
1276
கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட
மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப்
பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க
நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம்.
6
1277
நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல்
பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித்
துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை
நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால்.
7
1278
மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும்
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல்
வரு மேனிச் செங்கண் வரால் மட முட்டப் பால் சொரியும்
கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி.
8
1279
மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச்
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப
மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை
வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை.
9
1280
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல்
பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும்
வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி
மயில் குலமும் முகல் குலமும் மாறாட மருங்கு ஆடும்.
10
1281
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி
அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும்
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில்
சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு.
11
1282
இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும்
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள்
சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால்
தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர்.
12
1283
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி
ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம்
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள்.
13
1284
மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும்
அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும்
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும்
கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள்.
14
1285
தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண்
விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண்
குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும்.
15
1286
அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார்
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார்
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார்
திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார்.
16
1287
புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண்
மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில்
திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார்.
17
1288
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின்
அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின்
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்.
18
1289
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார்
காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள்
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன்
ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார்.
19
1290
மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும்
தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின்
பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த
சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார்.
20
1291
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால்
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம்
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார்.
21
1292
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின்
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர்
மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார்
பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார்.
22
1293
ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார்
காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார்
பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள
வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார்.
23
1294
அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு
மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக்
குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார்.
24
1295
கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார்
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன்
மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல்
அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார்.
25
1296
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில்
காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார்.
26
1297
ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த
தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை
மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத்
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார்.
27
1298
மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்
சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப்
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார்.
28
1299
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின்
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த
காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால்
பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார்.
29
1300
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து
பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார்
மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார்
பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார்.
30
1301
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய்
அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத்
தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச்
செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார்.
31
1302
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள்
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால்
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய
வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார்.
32
1303
அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன்
என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார்.
33
1304
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி
இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார்.
34
1305
மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித்
தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க்
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால்
ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார்.
35
1306
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும்
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர்
யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார்.
36
1307
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின்
நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்.
37
1308
பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி
மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்
கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார்.
38
1309
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம்
பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத்
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத்
தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார்.
39
1310
அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில்
சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண்
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய
வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார்.
40
1311
அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச்
செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும்
தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ
நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார்.
41
1312
பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால்
ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார்
நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும்
சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார்.
42
1313
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக்
குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம்
அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால்
துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார்.
43
1314
புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப்
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்.
44
1315
நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில்
கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார்
கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு
மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து.
45
1316
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை
ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை
ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள
வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால்.
46
1317
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும்
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச்
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப்
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார்.
47
1318
மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார்
உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான்
முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்
அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வான் என அருளி.
48
1319
பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும்
தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக்
கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால்.
49
1320
அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது
வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம்
கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப்
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார்.
50
1321
அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும்
விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம்
நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார்.
51
1322
அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக்
கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார்
தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார்.
52
1323
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது
குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை
கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும்
பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார்.
53
1324
தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி
ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய்
ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப்
போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று.
54
1325
குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப்
பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக்
கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த.
55
1326
ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார்
பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத்
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான்.
56
1327
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை
எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த
நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான்.
57
1328
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து
நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம்
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய
அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான்.
58
1329
அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச்
செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என.
59
1330
எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி
அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத்
தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார்.
60
1331
பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து
கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண்
செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார்.
61
1332
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக்
குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று
இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில்
திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார்.
62
1333
வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர்
இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது
உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து.
63
1334
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது
கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது
மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார்.
64
1335
மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும்
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர்
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர்
பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார்.
65
1336
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து
சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக்
குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார்.
66
1337
திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப
பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு
உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி
தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார்.
67
1338
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும்
மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய்
சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார்.
68
1339
திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக
வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித்
தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால்
உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார்.
69
1340
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன்
    நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை
    மருளும் பிணி மாயை அறுத்திடுவான்
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என
    நீடிய கோதில் திருப்பதிகம்
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம்
    போமாறு எதிர் நின்று புகன்றனரால்.
70
1341
மன்னும் பதிகம் அது பாடியபின்
    வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான்
அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும்
    அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச்
செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம்
    திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர்
முன் நின்ற தெருட்சி மருட்சியினால்
    முதல்வன் கருணைக் கடல் மூழ்கினாரே.
71
1342
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம்
    அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப்
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப்
    புவி மீது விழுந்து புரண்டு அயர்வார்
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு
    அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின்
தங்கும் கருணைப் பெரு வெள்ளம்
    இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார்.
72
1343
பொய் வாய்மை பெருக்கிய புன்
    சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து
    எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறும் குழல் மா மலையாள்
    மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்
இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு
    எதிர்செய் குறை என் கொல் எனத் தொழுவார்.
73
1344
மேவுற்ற இவ் வேலையில்
    நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப்
    பதிகத் தொடைபாடிய பான்மையினால்
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும்
    நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான்
    இடையே ஒருவாய்மை எழுந்ததுவே.
74
1345
இத்தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு
    இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள்
சித்தம் திகழ் தீவினையேன் அடையும்
    திருவோ இது என்று தெருண்டு அறியா
அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு
    அருளும் கருணைத் திறமான அதன்
மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே
    மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே.
75
1346
பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி
    புன் தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா
    அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ்
    முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால்
    நெடு மா கடல் என்ன நிறைந்துளதே.
76
1347
மையல் துறை ஏறி மகிழ்ந்து
    அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய் உற்ற திருப்பணி செய்பவராய்
    விரவும் சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறா உணர்வும்
    ஈறு இன்றி எழும் திருவாசகமும்
கையில் திகழும் உழவாரமுடன் கைக்
    கொண்டு கலந்து கசிந்தனரே.
77
1348
மெய்ம்மைப் பணி செய்த விருப்பு
    அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில்
தம் இச்சை நிரம்ப வரம் பெறும்
    அத் தன்மைப் பதி மேவியதா பதியார்
பொய்மைச் சமயப் பிணி விட்டவர்
    முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா
எம்மைப் பணிகொள் கருணைத் திறம்
    இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே.
78
1349
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கைய வண்ணம்
பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில்
புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய்.
79
1350
தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார்
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார்.
80
1351
மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால்
நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக்
கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர்
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார்.
81
1352
இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி
மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு
சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம்
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்.
82
1353
தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம்
பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு
எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார்.
83
1354
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர்
முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார்.
84
1355
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர்
கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார்.
85
1356
அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற
வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால்
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான்.
86
1357
கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால்
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு
உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச்
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார்.
87
1358
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து
புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே
கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான்.
88
1359
தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை
அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார்
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர்.
89
1360
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித்
தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப்
பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான்.
90
1361
அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி
பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார்.
91
1362
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து
மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார்.
92
1363
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின்
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத்
தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி
ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார்.
93
1364
ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி
வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார்
மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார்.
94
1365
பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை
வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச்
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார்.
95
1366
அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப்
பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித்
திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார்.
96
1367
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத்
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று
மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார்.
97
1368
வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம்
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே.
98
1369
மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப்
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை
ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார்.
99
1370
ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப்
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும்
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர்
தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள்.
100
1371
ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர்
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே
ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார்.
101
1372
அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால்
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து
மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று
முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள்.
102
1373
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன்
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத்
தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப்
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார்.
103
1374
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே
செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்.
104
1375
பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள்
முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால்
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ.
105
1376
அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே
இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத்
தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார்.
106
1377
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர்
தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான்
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும்
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார்.
107
1378
மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும்
செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப
உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின்
கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார்.
108
1379
மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம்
கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப்
பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல்
கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான்.
109
1380
கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு
மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித்
தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின்
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம்.
110
1381
பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா
மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா
ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா
வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால்.
111
1382
இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில்
படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில்
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின்
முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே.
112
1383
மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக்
கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச்
சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று
ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே.
113
1384
பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர்
நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல்
ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார்
சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர்.
114
1385
அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு
விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச்
சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார்.
115
1386
வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்
வெம்ஞ்சுடர் மூவிலைச் சுல வீரட்டர் தம் அடியோம் நாம்
அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார்.
116
1387
தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக்
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம்.
117
1388
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத்
தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரிந்து
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே.
118
1389
ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல
ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே.
119
1390
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகித்
தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான்.
120
1391
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர்
பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப்
பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார்.
121
1392
அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான்
தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைவித்தவன் தன்னைச்
சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார்.
122
1393
ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப்
பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில்
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான்.
123
1394
அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த
வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர்
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர்.
124
1395
அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்
ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார்.
125
1396
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி
நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று
அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு
பற்றி உணர்வினால் பதிகம் பாடினார்.
126
1397
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்
அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு
அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக்
கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே.
127
1398
அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத்
தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும்
தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர்
மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார்.
128
1399
இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட
அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்
ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ.
129
1400
அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக்
கருணை நாவரசினைத் திரைக் கரங்களால்
தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட
வருணனும் செய்தனன் முன்பு மா தவம்.
130
1401
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.
131
1402
அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை
மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ
எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல்
தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே.
132
1403
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன்
செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண்
கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார்.
133
1404
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும்
சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே.
134
1405
மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி
வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால்
உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள்
செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார்.
135
1406
தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும்
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப்
பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின்
காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார்.
136
1407
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம்
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள
மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம்
தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார்.
137
1408
மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி
இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும்
தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார்.
138
1409
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார்
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப்
பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும்
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே.
139
1410
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும்
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப்
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல்
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே.
140
1411
கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால்
மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம்
உண்டாய்¢ன வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும்
தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே.
141
1412
இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல
அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச்
செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே.
142
1413
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே
எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று
தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்.
143
1414
அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத்
தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம்
பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள்.
144
1415
புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து
வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான்.
145
1416
வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப்
பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான்.
146
1417
இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு
மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல்
பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச்
சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார்.
147
1418
திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும்
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப்
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார்.
148
1419
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும்
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி
வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப்
பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார்.
149
1420
புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன்
தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார்.
150
1421
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து
முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத்
தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை
நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும்.
151
1422
நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற
ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோலில்
சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த.
152
1423
ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத்
தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து
தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால்
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார்.
153
1424
தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப்
பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள்
பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும்
தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து.
154
1425
வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள
தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவிடம்
கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல்
புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார்.
155
1426
ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து
தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார்.
156
1427
நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர்
    நடம் ஆடிய திரு எல்லை பால்
மேவித் தலம் உற மெய்யில் தொழுத
    பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும்
காவில் களி மயில் மகிழ் உற்று எதிர்
    எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ்
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு
    மருதத் தண்பணை வழி வந்தார்.
157
1428
முருகில் செறி இதழ் முளரிப்
    படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும்
அருகில் செறிவனம் என மிக்குயர்
    கழை அளவில் பெருகிட வளர் இக்குப்
பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன
    பெரியோர் அவர் திருவடிக் கண்டு
உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன
    என முன்புள வயல் எங்கும்.
158
1429
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை
    வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்
பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை
    பெருகித் தொடர்பிணி உறுபாசம்
பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை
    பயில் சூழ் சினை மிசை குயில் கூவும்
செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு
    திரு நந்தன வனம் எதிர் கண்டார்.
159
1430
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு
    அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்
தவம் முன் புரிதலில் வரு தொண்டு
    எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம்
இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம்
    என வந்து எதிர் அரகர என்றே
சிவ முன் பயில் மொழி பகர் கின்றன
    வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை.
160
1431
அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும்
    அவரும் தொழுது முன் அளிகூரும்
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும்
    நிறை அன்பொடும் உரை தடுமாறச்
செஞ்சொல் திருமறை மொழி அந்தணர்
    பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில்
பொலி நெடு மதில் சூழ் குடதிசை     மணி வாயில் புறம் வந்துற்றார்.
161
1432
அல்லல் பவம் அற அருளும் தவ முதல்
    அடியார் எதிர் கொள அவரோடும்
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின்
    வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார்
கல்வித் துறை பல வரு மா மறை முதல்
    கரை கண்டு உடையவர் கழல் பேணும்
செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை
    வளர் சிவமே நிலவிய திருவீதி.
162
1433
நவ மின் சுடர் மணி நெடு மாலையும்
    நறு மலர் மாலையும் நிறை திருவீதிப்
புவனங்களின் முதல் இமையோர்
    தடமுடி பொருந்திய மணி போகட்டிப்
பவனன் பணி செய வருணன் புனல்
    கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று
எவரும் தொழுது எழும் அடியார் திரு
    அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள்.
163
1434
மேலம் பரதலம் நிறையும் கொடிகளில்
    விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும்
கோலம் பெருகிய திருவீதியை முறை
    குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு
    ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம்
    உறமெய் கொடு தொழுதுள்புக்கார்.
164
1435
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை
    வலம் வந்து அலமரு வரை நில்லா
அளவில் பெருகிய ஆர்வத்து இடை
    எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும்
புளகச் செறி நிரை விரவத் திருமலி
    பொன் கோபுரம் அது புகுவார் முன்
களனில் பொலிவிடம் உடையார் நடநவில்
    கனகப் பொது எதிர் கண்ணுற்றார்.
165
1436
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி
    நிறை அம்பலம் நினைவுற நேரே
கூடும் படி வரும் அன்பால் இன்புறு
    குணம் முன் பெறவரு நிலை கூடத்
தேடும் பிரமனும் மாலும் தேவரும்
    முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா
ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம்
    ஆரா வகை தொழுது ஆர்கின்றார்.
166
1437
கையும் தலை மிசை புனை அஞ்சலியன
    கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும்
    உடன் உருகும் பரிவின பேறு
எய்தும் மெய்யும் தரைமிசை
    விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர்
    ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால்.
167
1438
இத் தன்மையர் பல முறையும்
    தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும்
அத்தன் திரு அருள் பொழியும்
    கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம்
மெய்த் தன்மை யினில் விருத்தத்
    திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
    திரு நேரிசை மொழி பகர்கின்றார்.
168
1439
பத்தனாய்ப் பாட மாட்டேன்
    என்று முன் எடுத்துப் பண்ணால்
அத்தா உன் ஆடல் காண்பான்
    அடியனேன் வந்தவாறு என்று
இத்திறம் போற்றி நின்றே
    இன் தமிழ் மாலைப் பாடி
கைத் திருத் தொண்டு செய்யும்
    காதலில் பணிந்து போந்தார்.
169
1440
நீடிய மணியின் சோதி
    நிறை திரு முன்றின் மாடும்
ஆடு உயர் கொடி சூழ் பொன்
    தேர் அணி திரு வீதி உள்ளும்
கூடிய பணிகள் செய்து
    கும்பிடும் தொழிலர் ஆகிப்
பாடிய புனித வாக்கின்
    பணிகளும் பயிலச் செய்வார்.
170
1441
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க
    அன்னம் பாலிக்கும் என்னும்
திருக் குறுந் தொகைகள் பாடித்
    திரு உழவாரங் கொண்டு
பெருத்து எழு காதலோடும் பெரும்
    திருத் தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர்
    வெண்ணீற்று வண்டலாட.
171
1442
மேவிய பணிகள் செய்து
    விளங்குநாள் வேட்களத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச்
    சென்று முன் வணங்கிப் பாடிக்
காவியம் கண்டார் மன்னும்
    திருக்கழிப் பாலை தன்னில்
நாவினுக்கு அரசர் சென்று
    நண்ணினார் மண்ணோர் வாழ.
172
1443
சின விடை யேறுகைத் தோறும்
    மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து
வன பவள வாய்திறந்து வானவர்க்கும்
    தான் அவனே என்கின்றாள் என்று
அனைய திருப்பதிகம் உடன்
    அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி
நினைவரியார் தமைப் போற்றி நீடு
    திருப்புலியூரை நினைந்து மீள்வார்.
173
1444
மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை
    சொரியும் கழிப் பாலை மழுங்கு நீங்கி
நனைச்சினை மென் குளிஞாழல்
    பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர் தம் மனம் கோயில்
    கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத்
தினைத்தனையாம் பொழுது மறந்து
    உய்வேனோ எனப் பாடி தில்லை சார்ந்தார்.
174
1445
அரியானை என்று எடுத்தே
    அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை
பிரியாத பெரிய திருத் தாண்டகச்
    செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி
விரியா நின்று எவ் உலகும் விளங்கிய
    பொன் அம்பலத்து மேலி ஆடல்
புரியா நின்றவர் தம்மைப் பணிந்து
    தமிழால் பின்னும் போற்றல் செய்வார்.
175
1446
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா
    எறிக்கும் எனும் சிறந்த வாய்மை
அருஞ்சொல் வளத் தமிழ் மாலை
    அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சு உருகப் பொழி புனல்வார்
    கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்
தம் செயலின் ஒழியாத திருப்பணியும்
    மாறாது சாரும் நாளில்.
176
1447
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த
    கழு மலத்தின் இருந்த செம்கண்
விடை உகைத்தார் திரு அருளால்
    வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும்
அடைய நிறை சிவம் பெருக வளர்
    ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த
உடை மறைப் பிள்ளையார் திருவார்த்தை
    அடியார்கள் உரைப்பக் கேட்டார்.
177
1448
ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால்
    அமுதம் உண்ட போதே
ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன்
    எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல
காழி வரும் பெரும் தகை சீர்
    கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர
வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு
    மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த.
178
1449
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி
    அருள் முன் பெற்றுப்
பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி
    புரண்டு வலம் கொண்டு போந்தே
எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின்
    எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திரு நாரையூர்
    பணிந்து பாடிச் செல்வார்.
179
1450
தொண்டர் குழாம் புடை சூழத்
    தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம்
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து
    உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத்
தெண் திரைவாய்க் கல் மிதப்பில்
    உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும்
வண் தமிழால் எழுது மறை மொழிந்த
    பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்.
180
1451
நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை
    மடுத்து அருளி நேரே முன்னாள்
ஆண்ட அரசு எழுந்து அருளக்
    கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும்
காண்டகைய பெரு விருப்புக் கைம்
    மிக்க திரு உள்ளக் கருத்தினோடு
மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ
    எழுந்து அருளி முன்னே வந்தார்.
181
1452
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு
    உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப்
    பணிந்தவர்தம் கரங்கள் பற்றி
எழுதரிய மலக்கையால் எடுத்து
    இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மை
அழுது அழைத்துக் கொண்டவர்தாம்
    அப்பரே என அவரும் அடியேன் என்றார்.
182
1453
அம்பிகை செம் பொன் கிண்ணத்து
    அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு
    அரசர் எனச் சிறந்த சீர்த்தி
எம் பெரு மக்களும் இயைந்த
    கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம்
    பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்.
183
1454
பிள்ளையார் கழல் வணங்கப்
    பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமை வணங்கப்
    பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளம் நிறை காதலினால் ஒருவர்
    ஒருவரில் கலந்த உண்மை யோடும்
வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார்
    கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.
184
1455
அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம்
    அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருள் சமய முதல் சைவ நெறி தான்
    பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம்
    ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித்
தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று
    செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே.
185
1456
பண் பயில் வண்டு அறை சோலை சூழும்
    காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு
விண் பணிய ஓங்கு பெரு விமானம்
    தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச்
சண்பை வரு பிள்ளையார் அப்பர்
    உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக்
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை
    கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி.
186
1457
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது
    பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று
பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும்
    பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி
அரிய வகை புறம் போந்து பிள்ளையார்
    திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள்
    போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில்.
187
1458
அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும்
    அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில்
    திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில்
மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி
    மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு
    விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார்.
188
1459
ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை
    அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு
மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு
    இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடு
    திருக் குறுக்கை திரு நின்றி யூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
    கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார்.
189
1460
மேவு புனல் பொன்னி இருகரையும் சார்ந்து விடை
    உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக்
காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்
    கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி
பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப்
    பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து
    பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார்.
190
1461
ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற
    அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து
மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும்
    சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு
பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித்
    தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும்
பூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிஉறு
    கைத் தொண்டு போற்றிச் செய்வார்.
191
1462
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி
    இடை மருதைச் சென்று எய்திஅன்பினோடு
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண்
    தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப்
பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப்
    போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து
செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு
    எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார்.
192
1463
சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து
    இருந்த சிவக் கொழுந்தை
குன்ற மகள் தன் மனக் காதல் குலவும்
    பூசை கொண்டு அருளும்
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி
    இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்து தமிழ்
    மொழி மாலைகளும் சாத்துவார்.
193
1464
கோவாய் முடுகி என்று எடுத்துக்
    கூற்றம் வந்து குமைப்பதன் முன்
பூவார் அடிகள் என்று அலைமேல்
    பொறித்து வைப்பாய் எனப் புகன்று
நாவார் பதிகம் பாடுதலும்
    நாதன் தானும் நல்லூரில்
வா வா என்றே அருள் செய்ய
    வணங்கி மகிழ்ந்து வாகீசர்.
194
1465
நன்மை பெருகஅருள்
    நெறியே வந்து அணைந்து நல்லூரின்
மன்னு திருத் தொண்டனார் வணங்கி
    மகிழ்ந்து எழும் பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை
    முடிகின்றோம் என்று அவர்தம்
சென்னி மிசைப் பாத மலர்
    சூட்டினான் சிவபெருமான்.
195
1466
நனைந்தனைய திருவடி
    என்தலைமேல் வைத்தார் என்று
புனையும் திருத்தாண்டகத்தால்
    போற்றி இசைத்துப் புனிதர் அருள்
நினைந்து உருகி விழுந்து எழுந்து
    நிறைந்து மலர்ந்து ஒழியாத
தனம் பெரிதும் பெற்று வந்த
    வறியோன் போல் மனம் தழைத்தார்.
196
1467
நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால்
மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து
பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித்
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள்.
197
1468
கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும்
திருவாவூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப்
பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந்திரு நல்லூர்
ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார்.
198
1469
ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய்
வாளை பாய் புனல் பழனத் திருப் பழனம் மருங்கு அணைந்து
காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு
நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார்.
199
1470
அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்
ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார்
மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார்
செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர்.
200
1471
அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப்
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண.
201
1472
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்
சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக்
கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப்
பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார்.
202
1473
காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார்
பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும்
வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால்
ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து.
203
1474
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம்
பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு
தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக்
குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார்.
204
1475
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே
பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம்
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள
ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான்.
205
1476
தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத்
தாயகரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம்
மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம்
தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார்.
206
1477
தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி
எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார்.
207
1478
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க்
கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே
ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப்
பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான்.
208
1479
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது
இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க
வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர்
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள்.
209
1480
திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப்
பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து
பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார்.
210
1481
புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ்
அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை
நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார்.
211
1482
எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும்
தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத்
தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச்
செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார்.
212
1483
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த
ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து
சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று
கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார்.
213
1484
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது
பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள்
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு
செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார்.
214
1485
நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை
பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து
சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி
அல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி.
215
1486
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர்
பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி
மேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக்
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார்.
216
1487
பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி
முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும்
திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார்.
217
1488
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம்
நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார்
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும்
சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார்.
218
1489
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால்
எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார்.
219
1490
பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால்
உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே
புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று
அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார்.
220
1491
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி
ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து
நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார்.
221
1492
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம்
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள்
தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப்
புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து.
222
1493
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம்
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி
ஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு
பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார்.
223
1494
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின்
    முன் தேவ ஆசிரியன் சார்ந்து
கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ
    மயில் ஆலும் ஆரூராரைக்
கையினால் தொழாது ஒழிந்து கனி
    இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்று
எய்து அரிய கை யறவால் திருப்பதிகம்
    அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே.
224
1495
மார் பாரப் பொழி கண்ணீர் மழை
    வாரும் திருவடிவும் மதுரவாக்கில்
சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின்
    மாலைகளும் செம் பொன் தாளே
சார்வான திருமனமும் உழவாரத்
    தனிப்படையும் தாமும் ஆகிப்
பார் வாழத் திரு வீதிப் பணி செய்து
    பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்.
225
1496
நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப்
    புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக்
கூடிய அன்பொடு காலங்களில்
    அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடு இளம் பூதத்தினான் எனும்
    பதிகம் முதலான பலவும் பாடி
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம்
    கரைந்து உருகி நயந்து செல்வார்.
226
1497
நான் மறைநூல் பெருமை நமி நந்தி
    அடிகள் திருத்தொண்டின் நன்மை
பான்மை நிலையால் அவரைப் பரமர்
    திருவிருத்ததுள் வைத்துப் பாடி
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர்
    அரன் நெறியில் நிகழும் தன்மை
ஆன திறமும் போற்றி அணி வீதிப்
    பணி செய்து அங்கு அமரும் நாளில்.
227
1498
நீர் ஆரும் சடை முடியார் நிலவு
    திரு வலி வலமும் நினைந்து சென்று
வார் ஆரும் முலை மங்கை உமை
    பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக்
கார் ஆரும் கறைக் கண்டர் கீழ்
    வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர்
    தனில் மீண்டும் அணைந்தார் அன்றே.
228
1499
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப்
    பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள் முன்
    சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து
மூவுலகும் களி கூர வரும் பெருமை
    முறைமை யெலாம் கண்டு போற்றி
நாவினுக்குத் தனி அரசர் நயக்கு
    நாள் நம்பர் திரு அருளினாலே.
229
1500
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ
    பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவி எழும்
    காதல் புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு
    தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப்
பொருப்பரையன் மடப் பாவை இடப்
    பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார்.
230
1501
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார்
    திருப்புகலி அதன் கண் நின்றும்
பன்னாகப் பூண் அணிவார் பயின்ற
    திருப்பதி பலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர்
    வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார்
    திருமடத்தில் மேவும் காளை.
231
1502
ஆண்ட அரசு எழுந்து அருளி அணி
    ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும்
நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு
    நீடு திருப்புகலூர் நோக்கி
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி
    எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ
    எழுந்து அருளி எதிரே சென்றார்.
232
1503
கரண்டமலி தடம் பொய்கைக் காழியர்
    கோன் எதிர் அணையும் காதல் கேட்டு
வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி
    வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர்
    குழாம் இரு திறமும் சேர்ந்த போதில்
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி
    அணைந்த போல் இசைந்த அன்றே.
233
1504
திருநாவுக்கரசர் எதிர் சென்று
    இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மை
பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார்
    எதிர் வணங்கி அப்பரே நீர்
வரு நாளில் திருவாரூர் நிகழ்
    பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற
அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில்
    வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார்.
234
1505
சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும்
மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார்
முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை.
235
1506
அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்
கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார்.
236
1507
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந்
தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக
நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார்
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில்.
237
1508
அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப்
பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார்.
238
1509
தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப்
பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு
மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார்.
239
1510
சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு
ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல்
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.
240
1511
அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும்
துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால்
மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள்
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில்.
241
1512
பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர்
உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண்
வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள
எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார்.
242
1513
ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம்
ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப்
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை
நீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார்.
243
1514
திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில்
விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார்.
244
1515
அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற
மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும்
முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார்.
245
1516
திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும்
வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார்.
246
1517
செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப்
பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக்
குங்குலியக் கலயனார் திருமத்தில் குறை அறுப்ப
அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள்.
247
1518
சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி
ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்து
கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று
தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார்.
248
1519
சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக்
கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து
வார்த்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன்
சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை.
249
1520
வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும்
காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார்.
250
1521
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு
நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப்
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார்.
251
1522
சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி
வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார்.
252
1523
கைகள் குவித்துக் கழல் போற்றிக்
    கலந்த அன்பு கரைந்து உருக
மெய்யில் வழியும் கண் அருவி
    விரவப் பரவும் சொல் மாலை
செய்ய சடையார் தமைச் சேரார்
    தீங்கு நெறி சேர்கின்றார் என்று
உய்யும் நெறித் தாண்ட தம் மொழிந்து
    அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க.
253
1524
முன்னாள் அயனும் திருமாலும்
    முடிவும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணி வெற்பைப்
    பூ நீர் மிழலையினில் போற்றிப்
பல் நாள் பிரியா நிலைமையினால்
    பயிலக் கும்பிட்டு இருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில்
    இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.
254
1525
சீரின் விளங்கும் திருத்தொண்டர்
    இருந்து சில நாள் சென்று அதன் பின்
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும்
    பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும்
    பல மன் உயிர்கள் எல்லாம்
பாரின் மலிந்த இலம் பாட்டில்
    படர் கூர் வறுமை பரந்ததால்.
255
1526
வையம் எங்கும் வற்கடம்
    ஆய்ச் செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்
    தமக்கும் நாவுக்கு அரசருக்கும்
கையில் மானும் மழுவும் உடன்
    காணக் கனவில் எழுந்து அருளிச்
செய்ய சடையார் திருவீழி மிழலை
    உடையார் அருள் செய்வார்.
256
1527
கால நிலைமையால் உங்கள்
    கருத்தில் வாட்டம் உறீர் எனினும்
ஏல உம்மை வழி படுவார்க்கு
    அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்து அருளிக்
    குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
    வைத்தார் மிழலை நாயகனார்.
257
1528
விண்ணின் நின்று இழிந்த விமானத்தின்
    கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண் தகையார்
    தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறும் காசு
    படிவைத்து அருள நானிலத்தில்
எண்ணில் அடியார் உடன் அமுது
    செய்து அங்கு இருந்தார் இருவர்களும்.
258
1529
அல்லார் கண்டத்து அண்டர் பிரான்
    அருளால் பெற்ற படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருகப்
    பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு
    பொழுதும் பறை நிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறு இட்டார்
    துயர் கூர் வறுமை தொலைத்திட்டார்.
259
1530
ஈசர் மிழலை இறையவர் பால்
    இமையப் பாவை திருமுலைப் பால்
தேசம் உய்ய உண்டவர் தாம்
    திருமா மகனார் ஆதலினால்
காசு வாசியுடன் பெற்றார் கைத்
    தொண்டு ஆகும் படிமையினால்
வாசி இல்லாக் காசு படி
    பெற்று வந்தார் வாகீசர்.
260
1531
ஆறு சடை மேல் அணிந்து அருளும்
    அண்ணல் வைத்த படிக் காசால்
ஈறு இலாத பொருள் உடைய
    இருவர் உடைய திருமடங்கள்
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து
    உண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவி போற்ற
    இன்புற்று இருக்கும் அந் நாளில்.
261
1532
காலம் தவறு தீர்ந்து எங்கும்
    கலி வான் பொழிந்த புனல் கலந்து
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி
    உணவு பெருகி நலம் சிறப்ப
மூல அன்பர் இருவர்களும்
    மொழி மாலைகளும் பல சாத்தி
நீல கண்டர் உறை பதிகள்
    பிறவும் வணங்க நினைவுற்றார்.
262
1533
வாய்ந்த மிழலை மா மணியை
    வணங்கிப் பிரியா விடை கொண்டு
பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப்
    போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி
    இசை வண் தமிழ்கள் புனைந்து போய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு
    எல்லை இல்லாச் சீர்த்தியினார்.
263
1534
மன்றல் விரவு மலர்ப் புன்னை
    மணம் சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறும் சிறு மடவார்
    முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த
    கோயில் புகுந்து வலம் கொண்டு
சென்று சேர்ந்தார் தென் புகலிக்
    கோவும் அரசும் திரு முன்பு.
264
1535
பரவை ஓதக் கழிக்கானல்
    பாங்கு நெருங்கும் அப் பதியில்
அரவச் சடை அந்தணனாரை
    அகில மறைகள் அர்ச்சனை செய்து
உரவக் கதவம் திருக் காப்புச்
    செய்த அந்நாள் முதல் இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற
    மணி நீள வாயில் வணங்குவார்.
265
1536
தொல்லை வேதம் திருக் காப்புச்
    செய்த வாயில் தொடர் அகற்ற
வல்ல அன்பர் அணையாமை மருங்கு
    ஓர் வாயில் வழி எய்தி
அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள்
    தொழுவார் ஆம்படி கண்டு
எல்லை இல்லாப் பெரும் புகழார்
    இதனை அங்குக் கேட்டு அறிந்தார்.
266
1537
ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி
    ஆழித் தோணி புரத்து அரசர்
ஓங்கு வேதம் அருச்சனை செய்
    உம்பர் பிரானை உள் புக்குத்
தேம்கா திருவோம் நேர் இறைஞ்சத்
    திருமுன் கதவம் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பர் என
    நீடும் திருநாவுக்கு அரசர்.
267
1538
உண்ணீர்மையினால் பிள்ளையார்
    உரை செய்து அருள அதனாலே
பண்ணினேரு மொழியாள் என்று
    எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு
    நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர்
    என்று பாடி இறைஞ்சுதலும்.
268
1539
வேத வளத்தின் மெய்ப் பொருளின்
    அருளால் விளங்கும் மணிக் கதவம்
காதல் அன்பர் முன்பு திருக்
    காப்பு நீங்கக் கலை மொழிக்கு
நாதர் ஞான முனிவருடன்
    தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கு எழுந்த
    தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும்.
269
1540
அன்பர் ஈட்டம் களி சிறப்ப
    ஆண்ட அரசும் சிவக் கன்றும்
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி
    எழுந்து உள் புகுந்து தம் பெருமான்
முன்பு பணிந்து போற்றி இசைத்துப்
    பரவி மொழி மாலைகள் பாடி
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி
    அரிதில் புறத்து அணைந்தார்.
270
1541
புறம்பு நின்று வாகீசர் புனிதர்
    அருளால் இக் கதவம்
திறந்தும் அடைத்தும் செல்லும்
    நெறி திருந்த மலையாள் திருமுலையில்
கறந்த ஞானம் குழைத்த அமுது
    செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும்
    வகை நீரும் பாடி அருளும் என.
271
1542
சண்பை ஆளும் தமிழ் விரகர்
    தாமும் திரு நாவுக்கரசர்
பண்பின் மொழிந்த உரை கொண்டு
    பதிகம் பாடும் அவ்வளவில்
கண் பொற்பமைந்த நுதல்
    காளகண்டர் அருளால் கடிதுடனே
திண் பொன் கதவம் திருக் காப்புச்
    செய்து எடுத்த திருப் பாட்டில்.
272
1543
அது கண்டு உடைய பிள்ளையார்
    தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து
இது நம் பெருமான் அருள் செய்யப்
    பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார்
    பாடித் தொழுது பணிவு உற்றார்
எதிர் பொன் திருவாயிலின் வழக்கம்
    என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல்.
273
1544
அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு
    அடியார் எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திட மெய்
    பொழியும் கண்ணீர் பரந்து இழிய
எங்கும் நிகர் ஒன்று இல்லாத
    இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெரும் தகையும்
    அரசும் மடத்தில் நண்ணிய பின்.
274
1545
அரிதில் திறக்கத் தாம் பாட
    அடைக்க அவர் பாடிய எளிமை
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது
    அயர்ந்தேன் எனக் கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில்
    ஒருபால் அணைந்து பேழ் கணித்து
மருவும் உணர்வில் துயில் கொண்டார்
    வாய்மை திறம்பா வாகீசர்.
275
1546
மன்னும் செல்வ மறைக்காட்டு
    மணியின் பாதம் மனத்தின் கண்
உன்னித் துயிலும் பொழுதின் கண்
    உமை ஓர் பாகம் உடையவர் தாம்
பொன்னின் மேனி வெண் நீறு
    புனைந்த கோலப் பொலிவினொடும்
துன்னி அவர்க்கு வாய் மூரில்
    இருப்போம் தொடர வா என்றார்.
276
1547
போதம் நிகழ வா என்று
    போனார் என் கொல் எனப் பாடி
ஈது எம்பெருமான் அருளாகில்
    யானும் போவேன் என்று எழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு
    விரைந்து போக அவர் முன்னே
ஆதி மூர்த்தி முன் காட்டும்
    அவ் வேடத்தால் எழுந்து அருள.
277
1548
சீரார் பதியின் நின்று எழுந்து
    செல்லும் திருநாவுக்கு அரசர்
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண
    எய்தா வாறே போல்
நீரார் சடையார் எழுந்து அருள
    நெடிது பின்பு செல்லும் அவர்
பேராளரை முன் தொடர்ந்து அணையப்
    பெறுவார் எய்தப் பெற்று இலரால்.
278
1549
அன்ன வண்ணம் எழுந்து அருளி
    அணித்தே காட்சி கொடுப்பார் போல்
பொன்னின் கோயில் ஒன்று எதிரே
    காட்டி அதனுள் புக்கு அருளத்
துன்னும் தொண்டர் அம் மருங்கு
    விரைந்து தொடரப் போந்த படி
மன்னும் புகலி வள்ளலார் தாமும்
    கேட்டு வந்து அணைந்தார்.
279
1550
அழைத்துக் கொடு போந்து அணியார்
    போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே
    திறப்பித் தேனுக்கே அல்லால்
உழைத்தாம் ஒளித்தால் கதவம்
    தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார்
    தாம் இங்கு எப்பால் மறைவது என.
280
1551
மாட நீடு திருப்புகலி
    மன்னர் அவர்க்கு மால் அயனும்
நேடி இன்னங் காணாதார்
    நேரே காட்சி கொடுத்து அருள
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி
    அரசும் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்று எடுத்துப்
    பரமர் தம்மைப் பாடினார்.
281
1552
பாடும் தமிழ் மாலைகள் கொண்டு
    பரமர் தாமும் எழுந்து அருள
நீடும் திருவாய்மூர் அடைந்து
    நிலவும் கோயில் வலம் செய்து
சூடும் பிறையார் பெரும் தொண்டர்
    தொழுது போற்றித் துதி செய்து
நாடும் காதல் வளர்ந்து ஓங்க
    நயந்து அந் நகரில் உடன் உறைந்தார்.
282
1553
ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே
    அங்கண் இனிது அமர்ந்து
பூண்ட காதல் பொங்கி எழ
    வாய் மூர் அடிகள் போற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை
    சாத்தி ஞான முனிவர் ஒடு
மீண்டு வந்து திருமறைக் காடு
    எய்தி விமலர் தாள் பணிந்தார்.
283
1554
ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு
    ஆன பணி செய்து அமரும் நாள்
சீத மதி வெண் குடை வளவர்
    மகளார் தென்னன் தேவியாம்
கோதில் குணத்துப் பாண்டி மா
    தேவியார் முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர் வந்தார்
    புகலி வேந்தர் தமைக் காண.
284
1555
வந்து சிவனார் திருமறைக் காடு
    எய்தி மன்னு வேணுபுரி
அந்தணாளர் தமக்கு அறிவித்து
    அவர் பால் எய்தி அடி வணங்க
சிந்தை மகிழ்ந்து தீது இன்மை
    வனவத் தீங்கும் உளவாமோ
இந்த உலகம் உய வந்தீர்
    இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார்.
285
1556
சைவ நெறி வைதிகம் நிற்கச்
    சழக்கு நெறியைத் தவம் என்னும்
பொய் வல் அமணர் செயல் தன்னைப்
    பொறுக்க கில்லோம் எனக் கேட்டே
அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி
    ஆதிசைவ நெறி விளங்கத்
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர்
    கொள் சண்பைத் திரு மறையோர்.
286
1557
ஆய பொழுது திரு நாவுக்கரசு
    புகலி ஆண் தகைக்குக்
காய மாசு பெருக்கி உழல்
    கலதி அமணர் கடுவினை செய்
மாயை சாலம் மிக வல்லார் அவர்
    மற்று என்னை முன் செய்த
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்
    இசையேன் யான் என்றார்.
287
1558
என்று கூற எல்லை இலா
    நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்து உடையேன்
    அங்குத் தீங்கு புரி அமணர்
நின்ற நிலைமை அழிவித்துச் சைவ
    நெறி பாரித்து அன்றி
ஒன்றும் செய்யேன் ஆணை உமது
    என்றார் உடைய பிள்ளையார்.
288
1559
போமா துணிந்து நீர் அங்குப்
    போகப் போதா அவ் அமணர்
தீ மாயையினை யானே போய்ச்
    சிதைத்து வருகின்றேன் என்ன
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை
    மறுக்க மாட்டது அரசு இருப்பத்
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில்
    போனார் ஞானத் தலைவனார்.
289
1560
வேணு புரக்கோன் எழுந்து அருள
    விடைகொண்டு இருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில்
    புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப்
பேணி இருந்து அங்கு உறையும் நாள்
    பெயர்வார் வீழிமிழலை அமர்
தாணுவின் தன் செய்ய கழல்
    மீண்டும் சார நினைக்கின்றார்.
290
1561
சோலை மறைக் காட்டு அமர்ந்து
    அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய்
வேலை விடம் உண்டவர் வீழி மிழலை
    மீண்டும் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம்
    பிறவும் தாம் பணிந்து
சாலு மொழி வண் தமிழ்ப் பாடித்
    தலைவர் மிழலை வந்து அடைந்தார்.
291
1562
வீழி மிழலை தனிப் பணிந்து
    வேத முதல்வர் தாம் இருப்ப
ஆழி வலம் ஏந்திய அரியால்
    ஆகாசத்தின் நின்று இழிந்த
வாழி மலர்ந்த கோயில்தனில்
    மன்னும் பொருளை போற்றிசைத்துத்
தாழும் நாளில் பிறபதியும் பணியும்
    காதல் தலை நிற்பார்.
292
1563
பூவில் பொலியும் புனல் பொன்னிக்
    கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த
ஆவுக்கு அருளும் ஆவடு தண்
    துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி
நாவுக் கரசர் ஞானப் போன
    கர்க்குச் செம் பொன் ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றிப்
    போந்து பிறவும் பணிகின்றார்.
293
1564
செய்ய சடையார் பழையாறை எய்த
    அதனில் செல் பொழுதில்
மையல் அமணர் மறைத்த வடதளியின்
    மன்னும் சிவ னாரைக்
கைகள் கூப்பித் தொழுது அருளக்
    கண்டவாற்றால் அமணர்கள் தம்
பொய் கொள் விமானம் எனக் கேட்டுப்
    பொறாத உள்ளம் மிகப் புழுங்கி.
294
1565
அந்த விமானம் தனக்கு அருகா
    ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக்
கந்தம் மலரும் கடிக் கொன்றை
    முடியார் செய்ய கழல் உன்னி
மந்த அமணர் வஞ்சனையால்
    மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தம் கொண்ட குண்டர் திறம்
    பாற்றும் என்று பணிந்து இருந்தார்.
295
1566
வண்ணம் கண்டு நான் உம்மை
    வணங்கி அன்றிப் போகேன் என்று
எண்ண முடிக்கும் வாகீசர்
    இருந்தார் அமுது செய்யாதே
அண்ணலாரும் அது உணர்ந்து
    அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ணமாக மன்னனுக்குக்
    கனவில் அருளிச் செய்கின்றார்.
296
1567
அறிவில் அமணர் நமை மறைப்ப
    இருந்தோம் என்று அங்கு அடையாளக்
குறிகள் அறியச் செய்து அருளி
    நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமை அழித்து
    நீக்கிப் போக்கு என்று அருள் புரிய
செறிவில் அறிவுற்று எழுந்து அவனும்
    செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி.
297
1568
கண்ட வியப்பு மந்திரிகட்கு
    இயம்பிக் கூடக் கடிது எய்தி
அண்டர் பெருமான் அருள் செய்த
    அடையாளத்தின் வழி கண்டு
குண்டர் செய்த வஞ்சணையைக்
    குறித்து வேந்தன் குலவு பெரும்
தொண்டர் தம்மை அடி வணங்கித்
    தொக்க அமணர் தூர் அறுத்தான்.
298
1569
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண்
    ஆயிரமும் மாய்ந்தற் பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம்
    ஆக்கி விளக்கியபின்
ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு
    நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச
ஞான அரசும் புக்கு இறைஞ்சி
    நாதர் முன்பு போற்றுவார்.
299
1570
தலையின் மயிரைப் பறித்து உண்ணூம்
    சாதி அமணர் மறைத்தாலும்
நிலை இலாதார் நிலைமையினால்
    மறைக்க ஒண்ணுமோ என்னும்
விலை இல் வாய்மைக்குறும் தொகைகள்
    விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே
இலை கொள் சூலப் படையார் சேர்
    இடங்கள் பிறவும் தொழ அணைவார்.
300
1571
பொங்கு புனலார் பொன்னியில்
    இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித்
    தமிழ் மாலைகளும் சாத்திப் போய்
எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறில்
    தொண்டர் எதிர் கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக்
    காவின் மருங்கு சென்று அணைந்தார்.
301
1572
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச்
    செஞ்சொல் மாலை பல பாடி
இலங்கு சடையார் எறும்பியூர்
    மலையும் இறைஞ்சி பாடியபின்
சோதித் திருச்சிராப்பள்ளி
    மலையும் கற்குடியும்
நலம் கொள் செல்வத் திருப்பராய்த்
    துறையும் தொழுவான் நண்ணினார்.
302
1573
மற்றப் பதிகள் முதலான
    மருங்கு உள்ளனவும் கை தொழுது
பொன் புற்று அமைந்த திருப்பணிகள்
    செய்து பதிகம் கொடு போற்றி
உற்ற அருளால் காவிரியை
    ஏறி ஒன்னார் புரம் எரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச்
    சென்று சேர்கின்றார்.
303
1574
வழி போம் பொழுது மிக இளைத்து
    வருத்தம் உற நீர் வேட்கையொடும்
அழிவாம் பசி வந்து அணைந்திடவும்
    அதற்குச் சித்தம் அலையாதே
மொழி வேந்தரும் முன் எழுந்து
    அருள முருகு ஆர் சோலைப் பைஞ்ஞீலி
விழி ஏந்திய நெற்றியினார் தம்
    தொண்டர் வருத்தம் மீட்பாராய்.
304
1575
காவும் குளமும் முன் சமைத்துக்
    காட்டி வழி போம் கருத்தினால்
மேவும் திருநீற்று அந்தணராய்
    விரும்பும் பொதி சோறும் கொண்டு
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே
    நண்ணி இருந்தார் விண்ணின் மேல்
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி
    ஏனமும் காண்பு அரியவர் தாம்.
305
1576
அங்கண் இருந்த மறையவர் பால்
    ஆண்ட அரசும் எழுந்து அருள
வெங்கண் விடை வேதியர் நோக்கி
    மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர்
இங்கு என் பாலே பொதி சோறு
    உண்டு இதனை உண்டு தண்ணீர் இப்
பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப்
    போக்கிப் போவீர் எனப் புகன்றார்.
306
1577
நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர்
    அருள் என்று அறிந்தார் போல்
உண்ணும் என்று திருமறையோர்
    உரைத்துப் பொதி சோறு அளித்தலுமே
எண்ண நினையாது எதிர் வாங்கி
    இனிதாம் அமுது செய்து இனிய
தண்ணீர் அமுது செய்து அருளித்
    தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார்.
307
1578
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி
    இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர் போவது என்றார்
    அரசும் அவர்க்கு எதிரே
செப்புவார் யான் திருப்பைஞ்
    ஞீலிக்குப் போவ என்று உரைப்ப
ஒப்பு இலாரும் யான் அங்குப்
    போகின்றேன் என்று உடன் போந்தார்.
308
1579
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம்
ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப்
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில் வித்தார்.
309
1580
பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி
மைஞ் ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து
மெய்ஞ் ஞீலிர் மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக்
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்.
310
1581
நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும்
காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடி
மாதோர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார்.
311
1582
செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத் தொழுது வலம் கொண்டு
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும்
அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்.
312
1583
அண்ணாமலை மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம்
கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து எழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தை உடன்
பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார்.
313
1584
பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம் போற்றிப் பணி செயும் நாள்
மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும்
தணியாக் காதலுடன் சென்று வணங்கித் தக்க பணி செய்வார்
அணியார் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார்.
314
1585
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும்
சூதமலி தண் பணைப் பதிகன் பலவும் கடந்து சொல்லிக்கு
நாதர் போந்து பெரும் தொண்டை நன்னாடு எய்தி முன் ஆகச்
சீத மலர் மென் சோலை சூழ் திரு ஒத்தூரில் சென்று அடைந்தார்.
315
1586
செக்கர் சடையார் திரு ஒத்துத்தூர் தேவர் பிரானார் தம் கோயில்
புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல் பொழிய
முக் கண் பிரானை விரும்பும் மொழித் திருத் தாண்டகங்கள் முதலாகத்
தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்து ஒழுகுவார்.
316
1587
செய்ய ஐயர் திரு ஒத்தூர் ஏத்திப் போந்து செழும் புவனம்
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கித்
தையல் தழுவக் குழைந்த பிரான் தங்கும் தெய்வப் பதி என்று
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தா.
317
1588
ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர் தம் பேர் அருளினால்
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம்
சால மலர்ந்து களி சிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார்.
318
1589
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள்
நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொற்குடம் தீபம்
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிந்£ள் காஞ்சி அலங்கரித்தார்.
319
1590
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால்
கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும்
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர் கொண்டார்.
320
1591
எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளி
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வானநதி
குதி கொண்டு இழிந்த சடைக் கம்பர் செம் பொன் கோயில் குறுகினார்
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர்.
321
1592
திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்து
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து
வருவார் செம் பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மணி மேனிப்
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார்.
322
1593
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்பச்
சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பர் தமை
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார்.
323
1594
கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப்
பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின்
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்
அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார்.
324
1595
கையார்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும்
செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி
மையார்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு
மெய்யார்வம் உறத் தொழுது விருப்பினோடு மேவு நாள்.
325
1596
சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேல் தளி முதலாம்
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள்
ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால்
சார்வுறு மாலைகள் சாத்தித் தகும் தொண்டு செய்திருந்தார்.
326
1597
அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண்
மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச்
சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால்.
327
1598
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப்
பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின்
ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார்.
328
1599
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார்
நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார்
வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டு இடை போய்ப்
பருக்கைத் திண் களிற்று உரியார் கழுக் குன்றின் பாங்கு அணைந்தார்.
329
1600
நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப்
பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்
சூடும் இனம் பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய்
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார்.
330
1601
திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்த அன்பினொடும்
பெரு வாய்மைத் தமிழ்பாடி அம் மருங்கு பிறப்பு அறுத்துத்
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர்
மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார்.
331
1602
வரை வளர் மா மயில் என்ன மாடமிசை மஞ்சாடும்
தரை வளர் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளி
திரை வளர் வேலைக் கரை போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார்.
332
1603
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி
நற்கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப்
பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர்.
333
1604
திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு
ஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார்
கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார்.
334
1605
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத்
தொழுத ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம்
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார்.
335
1606
வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப்
பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார்
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம்
கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார்.
336
1607
விளங்கு பெருந் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே
உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக் குறுந் தொகைகள்
களங்கொள் திரு நேரிசைகள் பல பாடிக் கை தொழுது
வளங்கொள் திருப் பதியம் தனில் பல நாள்கள் வைகினார்.
337
1608
அங்குறையும் நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள்
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால்
பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள்
பங்குடையார் அமர்ந்திருப் பாசூராம் பதி அணைந்தார்.
338
1609
திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும்
விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய
இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப்
பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார்.
339
1610
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச்
சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும்
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி
எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர்.
340
1611
அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின்
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச்
செம்மையினால் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார்.
341
1612
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின்
ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப்
பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும்
மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார்.
342
1613
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார்
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரிக் கரை பணிந்து
தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம்
மல்கு திருக் காளத்தி மா மலை வந்து எய்தினார்.
343
1614
பொன் முகலித் திருநதியின் புனித நெடும் தீர்த்தத்தில்
முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில்
சென்னி உறப் பணிந்து எழுந்து செம் கண் விடைத் தனிப்பாகர்
மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார்.
344
1615
காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும்
காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய்
நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார்.
345
1616
மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும்
சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி
அலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத்
தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார்.
346
1617
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து
தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால்
பேணிதிருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம்
காணுமது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார்.
347
1618
அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப்
பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்போடு போதுவார்
துங்க மால் வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால் விடை அண்ணல் மேவும் திருப் பருப்பதம் எய்தினார்.
348
1619
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும்
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார்.
349
1620
அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படைச்
செம்மல் வெண் கயிலைப் பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால்
எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர்
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார்.
350
1621
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும்
திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும்
பெரு நலம் கிளர் நாடும் எண்ணில பின்படப் பொற்பினால்
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார்.
351
1622
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய்
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல்
பங்கயப் பழனத்து மத்திய பை திரத்தினை எய்தினார்.
352
1623
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும்
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன்
பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய்
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார்.
353
1624
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால்
போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச்
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர்
ஏகினார் இரவும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார்.
354
1625
ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன்
தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால்
வாய நாக மணிப் பணங் கொள் விளக்கு எடுத்தன வந்து
தோய வானவராயினும் தனி துன் அருஞ்சுரம் முன்னினார்.
355
1626
வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்யவன் கதிர் கை பரந்து
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன
பொங்கழற்று எறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும் பகல்
செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார்.
356
1627
இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் அரும் சுரம் எய்துவார்
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும்
மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார்.
357
1628
கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின்
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட
மொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்த முயங்கியே
மை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்.
358
1629
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட
நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடு
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் உடம்பு அடங்கம் ஊன் கெடச்
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்.
359
1630
அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால்
மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும்
தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார்.
360
1631
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்
மன்னும் தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த
நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவராம் படியால்.
361
1632
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார்.
362
1633
மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்
தேசுடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ
ஆசில் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப்
பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர்.
363
1634
வண்டுலாங் குழல் மலை மகளுடன் வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்
கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற.
364
1635
கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால்
வெயில் கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி.
365
1636
மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும்
தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்.
366
1637
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்தவர் தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால்
ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார்.
367
1638
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே
விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே
கண்ணினால் திருக் கயிலையில் இருந்த நின் கோலம்
நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார்.
368
1639
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில்
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை
பழுதில் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார்.
369
1640
ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி
ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப்
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்.
370
1641
ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார்
போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கி
மாதோர் பாகனார் மகிழும் ஐ ஆற்றில் ஓர் வாவி
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகெலாம் வியப்ப.
371
1642
வம்புலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி
உம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார்
எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண்
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார்.
372
1643
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார்
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார்.
373
1644
பொன் மலைக் கொடியுடன் அமர்வெள்ளியம் பொருப்பில்
தன்மை ஆம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார்.
374
1645
காணும் அப்பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப்
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர்
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத்
தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க.
375
1646
தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக்
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும்
தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப.
376
1647
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள்
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்சப்
பொங்கியங்களால் பூத வேதாளங்கள் போற்ற.
377
1648
அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர்
சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக.
378
1649
வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும்
தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப்பாகம்
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்.
379
1650
கண்ட ஆனந்தக் கடவினைக் கண்களால் முகந்து
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்.
380
1651
முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப்
பொன் பிறங்கிய சடையாரைப் போற்று தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர்.
381
1652
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புறக் கயிலை
மேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளித்
தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம்
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ.
382
1653
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர்
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச்
செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து
வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து.
383
1654
மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார்.
384
1655
கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக்
கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர்.
385
1656
நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக
மாடுயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித்
தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார்.
386
1657
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர் உறும் தன்மையர் ஆனார்.
387
1658
திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப்
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப
இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி.
388
1659
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று
பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார்.
389
1660
பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும்
செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு
எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார்.
390
1661
பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர் இருப்பக்
கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத்
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார்.
391
1662
தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் எனப்
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார்.
392
1663
சண்பை வருந் தமிழ் விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு
மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து
கண் பெருகுங் களிகொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால்
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார்.
393
1664
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார்
சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி
வாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார்.
394
1665
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி
அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின்
சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச்
சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து இலரால்.
395
1666
திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்கு
அருகுகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும்
பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார்.
396
1667
பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே
உள்ளமிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத்
துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார்.
397
1668
கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச்
செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின்
மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள்
தொழுது உருகி இன்புற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார்.
398
1669
வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால்
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில்
எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர்
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர்.
399
1670
பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும்
நண்புடைய குலச் சிறையார் பெருமையும் ஞானத் தலைவர்
எண் பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர்
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார்.
400
1671
பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில்
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு
உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப்
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார்.
401
1672
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும்
பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க்
காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம்
தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார்.
402
1673
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள்
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்
முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார்.
403
1674
எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச்
செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்
கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார்.
404
1675
சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின்
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே
பார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று
ஆரகிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார்.
405
1676
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல்
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான
பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார்.
406
1677
கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள்
நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி
வடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார்.
407
1678
தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த
பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி
துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர்.
408
1679
தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து
மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால்
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி
நாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார்.
409
1680
அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப்
பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி
செங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம்
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார்.
410
1681
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி
வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும்
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள்
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார்.
411
1682
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப்
பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே
பூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார்.
412
1683
பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி
நையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில்
கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன்
வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார்.
413
1684
நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும்
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும்
கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும்
துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார்.
414
1685
ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும்
பார் பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும்
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார்.
415
1686
அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர்
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில்
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார்.
416
1687
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும்
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க
எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி
வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார்.
417
1688
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த
நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால்
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார்.
418
1689
வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து
தான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மை
கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப்
பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார்.
419
1690
கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப்
பொற்புறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார்.
420
1691
ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க
ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.
421
1692
இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய
அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும்
மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம்
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார்.
422
1693
இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர்
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று
பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார்.
423
1694
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக்
காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும்
பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரைப் பெயர்விக்க
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார்.
424
1695
இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த
மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர்
மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும்
அந்நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார்.
425
1696
மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன்
என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார்.
426
1697
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று
நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி
அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார்.
427
1698
வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின்
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில்.
428
1699
அடியன் ஏன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப்
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன்
கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார்
முடிவில் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்.
429
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

5.2 குலச்சிறை நாயனார் புராணம்
1700
பன்னு தொல் புகழ்ப் பாண்டி நன் நாட்டு இடைச்
செந்நெலார் வயல் தீம் கரும்பின் அயல்
துன்னு பூகப் புறம் பணை சூழ்ந்தது
மன்னு வண்மையினார் மண மேற்குடி.
1
1701
அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம்
ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய
செப்பரும் சீர்க் குலச் சிறையார் திண்மை
வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர்.
2
1702
காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே
வாரம் ஆகி மகிழ்ந்தவர் தாள் மிசை
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார்.
3
1703
குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில்
செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார்.
4
1704
உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்
அலகில் தீமையர் ஆயினும் அம்புலி
இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில்
தலம் உறப் பணிந்து ஏத்தும் தகைமையார்.
5
1705
பண்பு மிக்கார் பலராய் அணையினும்
உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார்.
6
1706
பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து
ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை
ஓது நா வணக்கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார்.
7
1707
இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர்த்
தென்னவன் நெடு மாறற்குச் சீர் திகழ்
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார்
ஒன்னலர்ச் செற்று உறுதிக் கண் நின்று உளார்.
8
1708
ஆய செய்கையர் ஆயவர் ஆறணி
நாயனார் திருப் பாதம் நவின்று உளார்
பாய சீர் புனை பாண்டி மா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார்.
9
1709
புன்னையத் தருகந்தர் பொய் நீக்கவும்
தென்னர் நாடு திருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்.
10
1710
வாதில் தோற்ற அமணரை வன் கழுத்
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன்
வேத நீதி மிழலைக் குறும்பர் தாள்.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

5.3 பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்
1711
சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகஞ்சூழ்புடைத்தாய்
வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி
நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து
மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை.
1
1712
அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர் மிழலைக் குறும்பனார்
சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள்
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார்.
2
1713
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக்
கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார்
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும்
புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார்.
3
1714
இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின்
மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார்
சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து
நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார்.
4
1715
மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர்க் கழல்கள்
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப் பாட்டில்
செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாள் இணைக் கீழ்
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார்.
5
1716
நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின்
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார்.
6
1717
இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம்
பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர்
சென்னி மதி தோய் மாட மலி கொடுங் கோளூரைச் சேர்வுற்றார்.
7
1718
அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வட கயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வு
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார்.
8
1719
மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர்
நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து
கண்ணில் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று
எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார்.
9
1720
நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு
காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப
மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார்.
10
1721
பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக்
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி
மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும்
குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

5.4 காரைக்கால் அம்மையார் புராணம்
1722
மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்
ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக்
கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்.
1
1723
வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர்
தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால்
அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து
பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார்.
2
1724
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின்
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத்
தணிவில் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார்.
3
1725
பல்பெரு நற்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம்
செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால்
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்.
4
1726
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்றத் துணை முலைகள்
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பதக் கொள்கையினில் குறுகினார்.
5
1727
நல்லவென உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி
மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால்
இல்லிகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும்
தொல் குலத்து வணிகர் மகன் பேசுதற்குத் தொடங்குவார்.
6
1728
நீடிய சீர்க் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண்
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத்
தேடவரும் திருமரபில் சேயிழையை மகன் பேச
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார்.
7
1729
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து
தந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த
பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார்.
8
1730
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இடச் சென்று
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப்
பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும்
சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான்.
9
1731
மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள்
அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி
பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார்.
10
1732
அளி மிடை ஆர்த்த தன தத்தன் அணி மாடத்துள் புகுந்து
தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத்
தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக்
களி மகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள்.
11
1733
மங்கல மாமண வினைகள் முடித்து இயல்பின் வைகு நாள்
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன்
பொங்கொலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன்
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான்.
12
1734
மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்து அதன்பின்
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி தன் குல மகனும்
தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி
மிகப் புரியும் கொள்கையினில் மேம் படுதல் மேவினான்.
13
1735
ஆங்கு அவன் தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற
பூங்குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ்
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப்
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்.
14
1736
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
செம்பொன்னும் நவ மணியும் செழுந் துகிலும் முதலான
தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகு நாள்.
15
1737
பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான்.
16
1738
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு
மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதரார் வைத்து அதற்பின்
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர்
உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார்.
17
1739
வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு
நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப்
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார்.
18
1740
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும்
அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார்.
19
1741
இல்லாளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால்
அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார்.
20
1742
மூப்புறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத்
தீப் பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத் தொண்டர்
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப்
பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார்.
21
1743
மற்றவர் தாம் போயின பின் மனைப் பதி ஆகிய வணிகன்
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப்
பொற்புற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக்
கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார்.
22
1744
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின்
மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல்
அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார்.
23
1745
மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன்
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்.
24
1746
அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார்
மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான்
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்
கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று.
25
1747
மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்
உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான்
முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால்
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான்.
26
1748
அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும்
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார்
கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை
மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்.
27
1749
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார்
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு
மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்.
28
1750
ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான்
வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான்
தேசுடைய சடைப் பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்
ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்.
29
1751
பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை
ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான்.
30
1752
வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும்
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில்.
31
1753
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்
படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி
நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும்
வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்.
32
1754
கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும்
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி
சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும்
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல் மேல் போனான்.
33
1755
கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில்
அடை உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப்
படர் புனல் கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்.
34
1756
அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்.
35
1757
பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்
புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையின் ஓடு
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில்.
36
1758
முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்
இரு நிதிக் கிழவன் எய்திய திருவின் மிக்குப்
பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான்.
37
1759
மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத்
தொடர் அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு
கடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்.
38
1760
இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும்
கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன
தன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக.
39
1761
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன்
வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி
அளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று
கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே.
40
1762
அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும்
தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர்
கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார்.
41
1763
மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத்
தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும்
தே மொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார்.
42
1764
சில பகல் கடந்து சென்று செம் தமிழ்த் திருநாடு எய்தி
மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து
குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை
தொலைவில் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார்.
43
1765
வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்த
பைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவின் ஒடு
முந்துறச் செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான்.
44
1766
தானும் அம் மனைவி யோடும் தளிர் நடை மகவி னோடும்
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும்
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்.
45
1767
கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும்
அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார்.
46
1768
மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்
நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு
பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்.
47
1769
என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார்
மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக்
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார்.
48
1770
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால்
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்.
49
1771
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்.
50
1772
மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற
தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்.
51
1773
உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை
அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும்
நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி.
52
1774
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண
வாய்ந்த பேர் அருள் முன் கூற வழி படும் வழியால் வந்தார்.
53
1775
கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள்
கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவாறு கூறக் கேட்டே
அண்ட நாயகனாரென்னை அறிவரேல் அறியா வாய்மை
எண் திசை மக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார்.
54
1776
வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று
தொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும்
படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின்
நடையினைத் தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார்.
55
1777
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச்
சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே.
56
1778
அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து
தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும்
எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன
நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான்.
57
1779
வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.
58
1780
அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று
பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்.
59
1781
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்.
60
1782
கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும்
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலம் காட்டில்
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்
பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான்.
61
1783
அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத
மெய்ப் பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கிப் போந்து
செப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலம் காடாம்
நற் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே.
62
1784
ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு
மூலம் காண்பரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி
ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில்.
63
1785
மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்
இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி
எட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம்
கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார்.
64
1786
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி
கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர்
எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா.
65
1787
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச்
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம்
போத மா முனிவர் செய்த திருத் தொண்டு புகலல் உற்றேன்.
66
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

5.5 அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
1788
தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர்
ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார்
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னே
காண் தகு காதல் கூரக் கலந்த அன்பினராய் உள்ளார்.
1
1789
களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்
வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப் பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆ வொடு மேதி மற்றும்
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார்.
2
1790
வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால்
படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள
முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில்.
3
1791
பொருப்பரையன் மடப் பிடியின் உடன் புணரும் சிவக்களிற்றின்
திருப் பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கு அரசர்
ஒருப் படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும்
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார்.
4
1792
அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் அருள் உடையார்
உளம் அனைய தண் அளித்தாய் உறுவேனில் பரிவு அகற்றிக்
குளம் நிறைந்த நீர்த் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர்ப் பந்தர் வந்து அணைந்தார்.
5
1793
வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப்
பந்தர் உடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்து அருளிச்
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசெனும் பேர்
சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார்.
6
1794
இப் பந்தர் இப் பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு
அப் பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால்
செப்பருஞ் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார்
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார்.
7
1795
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று
நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத்
துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண்
சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார்.
8
1796
அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார்
தங்கும் மனைக் கடைத் தலை முன் சார்வாக உள் இருந்த
திங்களூர் மறைத் தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார்
நங்கள் பிரான் தமர் ஒருவர் எனக் கேட்டு நண்ணினார்.
9
1797
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர் தம்
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார்
முடிவில் தவம் செய்தேன் கொல் முன்பு ஒழியும் கருணை புரி
வடிவுடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார்.
10
1798
ஒரு குன்ற வில்லாரைத் திருப் பழனத்துள் இறைஞ்சி
வருகின்றோம் வழிக் கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம்
தருகின்ற நிழல் தண்ணீர்ப் பந்தரும் கண்ட அத் தகைமை
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் எனப் புகல்வார்.
11
1799
ஆறணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த
ஈறில் தண்ணீர்ப் பந்தரில் நும் பேர் எழுதாதே
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் கொல்
கூறும் என எதிர் மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார்.
12
1800
நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய்
நன்று அருளிச் செய்து இலீர் நாணில் அமண் பதகர் உடன்
ஒன்றிய மன்னவன் சூட்சி திருத் தொண்டின் உறைப் பாலே
வென்றவர் தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார்.
13
1801
நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத் தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளியச்
செம்மை புரி திருநாவுக்கரசர் திருப் பெயர் எழுத
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி.
14
1802
பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை
அங்கணர் தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர்
எங்கு உறைவீர் நீர் தாம் யார் இயம்பும் என இயம்பினார்.
15
1803
திரு மறையோர் அது மொழியத் திரு நாவுக்கரசர் அவர்
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையின் நின்றேற
அருளும் பெரும் சூலையினால் ஆட் கொள்ள அடைந்து உய்ந்த
தெருளும் உணர்வு இல்லாத சிறுமை யேன் யான் என்றார்.
16
1804
அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள் தாம்
கர கமலம் மிசை குவியக் கண் அருவி பொழிந்து இழிய
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலியத்
தரையின் மிசை வீழ்ந்தவர் தம் சரண கமலம் பூண்டார்.
17
1805
மற்றவரை எதிர் வணங்கி வாகீசர் எடுத்து அருள
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு மறையோர்
முற்றவும் களி கூற முன் நின்று கூத்தாடி
உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார்.
18
1806
மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே
ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்ட அரசு எழுந்து அருளும் ஓகை உரைத்து ஆர்வம் உறப்
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீளப் புறப்பட்டார்.
19
1807
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர்
அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதல் உடன்
முனைவரை உள் எழுந்து அருளுவித்து அவர் தாள் முன் விளக்கும்
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார்.
20
1808
ஆசனத்தில் பூசனைகள் அமர் வித்து விருப்பின் உடன்
வாசம் நிறை திரு நீற்றுக் காப்பு ஏந்தி மனம் தழைப்பத்
தேசம் உய்ய வந்த வரைத் திரு அமுது செய்விக்கும்
நேசம் உற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார்.
21
1809
செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி
எய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே என்று
மை திகழ் மிடற்றினான் தன் அருளினால் வந்தது என்றே
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார்.
22
1810
தூய நல் கறிகள் ஆன அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கு அரசை வாழை
மேய பொன் குருத்துக் கொண்டுவா என விரைந்து விட்டார்.
23
1811
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன் என்று
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்குப் பெரிய வாழை
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று
அல்லல் உற்று அழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற்று அன்றே.
24
1812
கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி காந்துகின்ற
பை அரா உதறி வீழ்த்துப் பதைப்பு உடன் பாந்தாள் பற்றும்
வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்திக்
கொய்த இக் குருத்தைச் சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான்.
25
1813
பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த
வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும்
அரும் தவர் அமுது செய்யத் தாழ்க்க யான் அறையேன் என்று
திருந்திய கருத்தினோடும் செழுமனை சென்று புக்கான்.
26
1814
எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்து
விரியுரை குழறி ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்வான்
பரி கலக் குருத்தைத் தாயார் பால் வைத்துப் படி மேல் வீழ்ந்தான்.
27
1815
தளர்ந்து வீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தை யாரும்
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார்.
28
1816
பெறல் அரும் புதல்வன் தன்னைப் பாயினுள் பெய்து மூடிப்
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று
விறல் உடைத் தொண்டனார் பால் விருப்பொடு விரைந்து வந்தார்.
29
1817
கடிது வந்து அமுது செய்யக் காலம் தாழ்கின்றது என்றே
அடிசிலும் கறியும் எல்லாம் அழகு உற அணைய வைத்துப்
படியில் சீர்த் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம்
குடி முழுதும் உய்யக் கொள்வீர் என்று அவர் கூறக் கேட்டு.
30
1818
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர்
திருந்தும் ஆசனத்தில் ஏறிப் பரிகலம் திருத்தும் முன்னர்
இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும்
பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்.
31
1819
ஆதி நான்மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார்.
32
1820
அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடு மாற்றம் சேர நோக்கி
இவ் உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால்
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்பு உற்று அஞ்சி.
33
1821
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ
வருவது என்று உரையார் ஏனும் மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே.
34
1822
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம்
யாவர் இத் தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம்
பா இசைப் பதிகம் பாடிப் பணி விடம் பாற்று வித்தார்.
35
1823
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானைப் போன்று
சேவுகைத்தவர் ஆட் கொண்ட திருநாவுக்கரசர் செய்ய
பூவடி வணங்கக் கண்டு புனித நீறு அளித்தார் அன்றே.
36
1824
பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின்
நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்ற அப் பயந்தார் தாங்கள்
அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்குச்
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார்.
37
1825
ஆங்கவர் வாட்டம் தன்னை அறிந்து சொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடும் தகுவன சமைத்துச் சார்வார்.
38
1826
புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித்
திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி
நிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மரபின் வைத்தார்.
39
1827
திருந்திய வாச நல் நீர் அளித்திட திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைகள் உடனே நோக்கி
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார்.
40
1828
மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது செய்யச்
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்கக்
கொந்து அவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும்
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே.
41
1829
மா தவ மறையோர் செல்வ மனை இடை அமுது செய்து
காதல் நண்பு அளித்துப் பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர்
நாதர் தம் பாதம் சேர்ந்து நல் தமிழ்ப் பதிகம் செய்வார்.
42
1830
அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து ஆன்ற
மெய்ப் பூதி அணிந்தார் தம்மை விரும்பு சொல் மாலை வேய்ந்த
இப் பூதி பெற்ற நல்லோர் எல்லை இல் அன்பால் என்றும்
செப்பு ஊதியம் கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம்.
43
1831
இவ் வகை அரசின் நாமம் ஏத்தி எப் பொருளும் நாளும்
அவ்வரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும்
செவ்விய நெறியது ஆகத் திருத் தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே.
44
1832
மான் மறிக் கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றிப்
கான் மலர்க் கமல வாவிக் கழனி சூழ் சாத்த மங்கை
நான் மறை நீல நக்கர் திருத் தொழில் நவிலல் உற்றேன்.
45
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

5.6 திருநீலநக்க நாயனார் புராணம்
1833
பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும்
காய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச்
சாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு.
1
1834
நன்மை சாலும் அப்பதி இடை நறு நுதல் மடவார்
மென் மலர்த் தடம் படிய மற்றவருடன் விரவி
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம்
பன் மறைக் கிடையுடன் பயிற்றுவ பல பூவை.
2
1835
ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில்
ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர்
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார்.
3
1836
சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர்
ஞாலம் மிக்க நான் மறைப் பொருள் விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார்.
4
1837
வேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்து
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார்.
5
1838
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை
நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா
எத் திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார்.
6
1839
ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்.
7
1840
உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்ற
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன
குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூட
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லையில் தவத்தோர்.
8
1841
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின்
துணை மலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கி
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார்.
9
1842
நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்
மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித்
தேடு மா மறைப் பொருளினைத் தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார்.
10
1843
தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம்
கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலை
நிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச்
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி.
11
1844
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக.
12
1845
பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம்
சிதைக்கு மா தவத் திரு மறையவர் கண்டு தம் கண்
புதைத்து மற்றிது செய்தது என் பொறி இலாய் என்னச்
சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார்.
13
1846
மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில்
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும்
நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார்.
14
1847
மின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர
முன் அனைந்து வந்து ஊதி வாய் நீர்ப் பட முயன்றாய்
உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார்.
15
1848
மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார்.
16
1849
அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான் மறைத் திரு நீல நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல் அணைப் பள்ளியில் பள்ளி கொள்கின்றார்.
17
1850
பள்ளி கொள் பொழுது தயவந்திப் பரமர் தாம் கனவில்
வெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டி
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழியக்
கொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள.
18
1851
கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக்
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்துத்
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார்.
19
1852
போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம்
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார்.
20
1853
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்த
இன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றி
அன்பு மேம் படும் அடியவர் மிக அணை வார்க்கு
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்ப முடன் முடிப்பார்.
21
1854
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாளில்
மன்னு பூம் தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம்
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார்.
22
1855
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவ
மண் பெரும் தவப் பயன் பெற மருவு நல் பதிகள்
விண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார்
சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார்.
23
1856
நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர்
தோடுலாங் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர்
கூடும் அப் பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர்.
24
1857
கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து
தோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள்
நாட்டி நீள் நடைக் காவணம் இட்டு நல் சுற்றத்து
ஈடமும் கொடு தாமும் முன் எதிர் கொள எழுந்தார்.
25
1858
சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக் கூட்டம்
ஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார்
பொன் தயங்கு நீள் மனை இடை உடன் கொண்டு புகுந்தார்.
26
1859
பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி
வள்ளலாரைத் தம் மனை இடை அமுது செய்வித்தார்.
27
1860
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக்
குமுத வாவியில் குளிர் மதிக் கதிர் அணை போதில்
இமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும்
தமது சீர் மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்.
28
1861
சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது செய்து அருளி
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார்.
29
1862
நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்கு
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர்.
30
1863
ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர
தாங்கு நூலவர் மகிழ் உறச் சகோட யாழ்த் தலைவர்
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார்.
31
1864
கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர்
அங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீல நக்கரைச் சிறப்பித்தே
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத் தொடை புனைந்தார்.
32
1865
பதிக நான் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி
அதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளி
எதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார்.
33
1866
பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும்
வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார்.
34
1867
மேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும்
தாவில் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்பச்
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறைச் சிறுவர்
பூவடித் தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார்.
35
1868
சண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் எப் பதியும்
நண்பு மேம்பட நாள் இடைச் செலவிட்டு நண்ணி
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார்
திண் பெரும் தொண்டர் ஆகிய திரு நீலக்கர்.
36
1869
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க
வருபெரும் தவ மறையவர் வாழி சீகாழி
ஒருவர் தம் திருக் கல்லியாணத்தினில் உடனே
திருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார்.
37
1870
தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில்
வருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கி
இரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால்
ஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம்.
38
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

5.7 நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
1871
வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம் பணையும் செழும் நீர்த் தடமும் புடை உடைத்தாய்
பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழ் அதனால்
எய்தும் பெருமை எண் திசையும் ஏறூர் ஏமப் பேர் ஊரால்.
1
1872
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழுநீர்ச் செய்.
2
1873
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது படச் செய்ய
துணர் மென் கமலம் இடை இடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன
புணர் வெண் புரி நூலவர் வேள்விக் களத்தில் புனைந்த வேதிகை மேல்
மணல் வெண் பரப்பின் இடை இடையே வளர்த்த செந்தீமானுமால்.
3
1874
பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச் சைவ நெறி
ஒருமை நெறி வாழ் அந்தணர் தம் ஓங்கு குலத்தினுள் வந்தார்
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப் பெற்ற தவத்து
அருமை புரிவார் நமி நந்தி அடிகள் என்பார் ஆயினார்.
4
1875
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ எனத் தகுவார்
தூய்மைத் திரு நீற்று அடைவே மெய்ப் பொருள் என்று அறியும் துணிவினார்
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார்.
5
1876
அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூறு அகற்றும் பெருமான் தன் விரை சூழ் மலர்த்தாள் பணி உறுதல்
எவ்வூதியமும் எனக் கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார் திருப் பாதங்கள் வணங்கினார்.
6
1877
செம் பொன் புற்றின் மாணிக்கச் செழும் சோதியை நேர் தொழுஞ் சீலம்
தம் பற்றாக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து
அம் பொன் புரிசைத் திருமுன்றில் அணைவார் பாங்கோர் அரன் நெறியின்
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உட்புக்கு வணங்க நண்ணினார்.
7
1878
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதல் உடன்
அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணுந் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார்.
8
1879
எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியின் இடை அப்பால் செல்லில் செல்லும் பொழுது என்ன
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும்
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார்.
9
1880
கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திருத் தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்.
10
1881
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த
முருகு விரியும் மலர்க் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி
உருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில்.
11
1882
வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாற
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால்.
12
1883
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார்
நன்னீர் பொய்கை நடுப்புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி
அந்நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார்.
13
1884
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன்
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய.
14
1885
நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரியக்
குறையும் தகளிகலுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து
மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே அணைவார் பணி உற்று ஒருப்பட்டார்.
15
1886
இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும் போல்
விரவி நியமத் தொழில் முறையே விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்து அருளிப் பள்ளி கொண்டு புலர் காலை
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார்.
16
1887
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம் கொண்டு
சிந்தை மகிழப் பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள்
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார்.
17
1888
பண்டு போலப் பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுகத்
தண்டி அடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வில் அமண்
குண்டர் அழிய ஏழ் உலகும் குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர்.
18
1889
நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆகப்
பூத நாதர் புற்றிடங் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம்
நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரி அணையின்
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம விதி விளங்க.
19
1890
வென்றி விடையார் மதிச் சடையார் வீதி விடங்கப் பெருமாள் தாம்
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம் திருநாள் உயர் சிறப்பும்
நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார்.
20
1891
இன்ன பரிசு திருப் பணிகள் பலவும் செய்தே ஏழ் உலகும்
மன்னும் பெருமைத் திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார்
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமி நந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய.
21
1892
தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒரு நாள் எழுந்து அருள
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்தம்
காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார்.
22
1893
பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டும் கோயில் புகத்
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழ்கின்றார்.
23
1894
திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யும் கடன் முறையால்
அங்கி தனை வேட்டு அமுது செய்து பள்ளி கொள்வீர் என அவர்க்குத்
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று.
24
1895
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும் அதற்கு நீ
சீத நன்னீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் எனச் செப்பக்
காதலால் மனையார் தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார்.
25
1896
ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ? மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ? அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின் கண்.
26
1897
மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமாள் தாம்
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார்.
27
1898
ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்த படியே வழிபட்டு
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு
நாதனார் தம் திருவாரூர் புகுத எதிர் அந் நகர் காண்பார்.
28
1899
தெய்வப் பெருமாள் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால்
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத்து அஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து களி சிறந்தார்.
29
1900
படிவம் மாற்றிப் பழம் படியே நிகழ்வும் கண்டு பரமர் பால்
அடியேன் பிழையைப் பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால்
குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார்.
30
1901
நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி ஆகவே
வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப் புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும்
பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்.
31
1902
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச் செய்து
நன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார்.
32
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
1903
நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம் படையின்
பூட்டார் மார்பில் சிறிய மறைப் புதல்வன் தன்னைப் புக்கு ஒளியூர்த்
தட்டா மரையின் மடுவின் கண் தனி மா முதலை வாய் நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே.
33
திருச்சிற்றம்பலம்
திருநின்ற சருக்கம் முற்றிற்று.

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com